Tuesday, May 21, 2013

களவு - பகுதி நான்கு



*******************************************முன் குறிப்பு *********************************************
இப்பகுதியை படிக்கத் தொடங்கும் முன், சுவாரசியம்  குறையாமல் இருக்க முதல் மூன்று  பகுதிகளை படித்து விட்டு, பின் தொடரவும். நன்றி. 
*********************************************************************************************************

அன்று - 1983 

மலையில் இருந்து கீழே இறங்கிய எட்டி, ஒரு குகைக்குள் நுழைந்தான். தீப்பந்த ஒளியில் கம்பத்துக்காரர் சம்மணம் போட்டு சாப்பிட்டுக்கொண்டிருந்தார், கேழ்வரகு களி போல் தெரிந்தது அரை போதையில் இருந்த எட்டிக்கு. 'எசமான் நீங்க சொன்ன மாதிரியே ஒருத்தன் வீரபாபுவ பார்க்க போனான். நானும் பின்னாடியே போனேன். மொத்தம் எட்டு கூரை வீடுங்க, இருபது ஆம்பள, நாலு பொம்பள, ஏழு பசங்க, பக்கத்துல ஒரு அருவி இருந்துச்சி, ஒரு காவலாளி மரத்து மேல இருந்து காவ காக்கரான்', என்று எட்டி கூறியதை ஆராய்ந்த அவர் மூளையின் நியுரான்கள் செயல் படத்தொடங்கின.

இருவரும் ஏறிக்கரை செல்ல, சின்னவர் எட்டு மாட்டு வண்டிகளுடன் தயார் நிலையில் இருந்தார். நான்கு வண்டிகளில் நெல் மூட்டைகள் நிறைந்திருந்தன, மற்ற நான்கு வண்டிகளில் ஆற்று மணல் நிரம்பிய மூட்டைகள் ஏற்றப்பட்டன. அங்கு வந்த பெரியவர்   'என்னையா, இவன்மணல் கொள்ளையனா இருப்பன்போல?' என்று சின்னவரை பார்த்துகேட்க, கம்பத்துக்காரர் 'பின்னாடி உங்க சமாதி கட்ட உதவும்னு, இப்பவே எடுத்து வைத்துகொள்கிறோம்.' என்று ஏளனம் செய்தார்.

பெரியவர் அழைத்து வந்த எட்டு பணியாட்கள் வண்டிகளை நகர்த்த, கம்பத்துக்காரர் எட்டியுடன் காட்டு வழியில் மலை ஏறத் தொடங்கினார். தேய் பிறை நிலாவும், மின்னலும் வழி காட்ட, இடி ஓசையுடன் இருவரும் அருவியை அடைய, வீரபாபு தன் படையுடன் குதிரையில் செல்வதைக் கண்டனர்.

எட்டி அந்த காவலாளி இருந்த மாமரத்தின் மேல், சிறிதும் சத்தம் இன்றி, உடும்பு போல், விறு விறு என்று, அந்த காவலன் காணும் முன் ஏறி, பின்னால் இருந்து அவன் கழுத்தை இருக்கி, தன் கையில் இருந்த துணியால் அவன் வாயை கட்டினான். அந்த காவலனை ,மற்ற பெண்கள் குழந்தைகளுடன் சேர்த்து ஒரு வீட்டினுள் கட்டி வைத்து, இருவரும் ஒரு புதரினுள் ஒழிந்தனர்.

(முந்தைய பகுதியில்) சின்னவர்கொடுத்த பையை கம்பத்துக்காரர் திறந்து அதனுள் இருந்த டார்ச்லைட்டை எடுத்து, ஏறிக்கரையை நோக்கி அதன் பொத்தனை மூன்று முறை இருபது நொடி இடைவெளி விட்டு அழுத்த, ஏறிக்கரையில் இருந்து மறு ஒளி வந்தது.

மண் சாலையில் இரு புறமும் அடர்ந்த காடு சூழ, ராந்தல் விளக்கு நிலவொளிக்கு பலம் சேர்க்க, சலங்கை ஒலியுடன் நான்கு வண்டிகள் வந்தன. வீரபாபு தன் சேனைகளுடன் சாலையை மறைத்து, அவனது இரு-தோட்டா துப்பாக்கியை வான் நோக்கி ஒரு முறை சுட, வண்டி ஒட்டி வந்தவர்கள் வந்த வழியே ஓடினர். இரண்டு வண்டிகளை விற்க எடுத்து செல்லவும், மற்ற இரண்டு வண்டியில் இருக்கும் மூட்டைகளை மேலே எடுத்து வரவும் ஆணையிட்டு மேலே சென்றான்.

பதினாறு பேரும் ஆளுக்கு ஒரு மூட்டையை சுமந்துமேலே ஏற, இருவர் வண்டி ஒட்டி செல்ல,ஒருவன் குடிசைக்குள் அடைக்க பட்டிருக்க, மற்றொருவன் எங்கே?. மூட்டை ஏந்தி வந்தவர்கள் அருவியை கடக்கும் போது, சின்னவர் தலைமையில் வந்த  ஊர் மக்கள் அவர்களை சுற்றி வளைத்தனர், தோளில் இருந்த சுமையால் அவர்களால் தப்ப முடிய வில்லை.

வீரபாபு அவன் மறைவிடம் வந்த போது அங்கு இருந்த அமைதி அவன் மனதில் குழப்பத்தை ஏற்படுத்த, குதிரையை விட்டு கீழே இறங்கி மரத்தின் மேல் பார்த்த போது, எட்டி அவன் பின் வந்து, குதிரையில் இருந்த வீரபாபுவின் துப்பாக்கியை தன் வசமாக்கினான்.

கம்பத்துக்காரர் அவன் முன் தோன்றி 'இனி நீ தப்ப முடியாது' என்றவுடன் வீரபாபு 'முட்டாள்களே, உங்களால் என்னை பிடிக்க முடியாது' என்று கூறி முடிப்பதற்குள் 'தொப்' என்று ஒரு சத்தம் கேட்டது. எட்டி கீழே கிடந்தான், வீரபாபுவின் தம்பி வீரவேலு கையில் கட்டையுடன் இருந்தான். வீரபாபு துப்பாக்கியை எடுத்து, குதிரையில் ஏறி, கம்பத்துக்காரரை நோக்கி சுட, இடியின் ஓசை அந்த தோட்டாவின் ஓசையை விழுங்க, மின்னல் வேகத்தில் கம்பத்துக்காரர் செயல்பட்டு விளக, அவர் இதயத்தை நோக்கி வந்த அந்த தோட்டா அவர் இடது  மார்பில் முத்தமிட்டது.

வீரபாபு அவன்தம்பியுடன் இருளில் மறைய, அனைவரும் அங்கு வர, பெரியவர்  'குருட்டு கபோதி வீரபாபு! நெஞ்ச பார்த்து சுட கூட தெரியலை' என்று அவன் சென்ற திசையை பார்த்து உறுமினார்.

இன்று - 2013

மூவரும் அந்த கிடங்கை அடைந்த போது, அங்கு காவல் துறை வந்து தயாராக இருந்தது. அங்கு இருந்த இன்ஸ்பெக்டர் பவன் சிங் காதை கடிக்க, பவன் சிங் முகம் மாறியது. கம்பத்துக்கரர் அருகில் வந்து , பவன் சிங் 'உங்க பேரன் இங்க இல்லையாம், அவனோட டிரஸ், வாட்ச் மட்டும் தான் இருக்கு' என்று கூற கம்பத்துக்கரர் தான் உள்ளே சென்று பார்க்க வேண்டும் என்று செல்ல, அவர் முகத்தில் வியர்வை வடிவதை கே.கே. கண்டார். உள்ளே சென்று ஏமாற்றத்துடன் திரும்பிய கம்பத்துக்கரர் படியில் இறங்கும்போது, படியின் முனையில் இருந்த தாமரை போன்ற கை பிடியை பிடிக்க, அது அவர் கையுடன் வர, ஒரு கையால் தன் இடது மார்பை பிடித்த படி மயங்கி விழுந்தார்.



8 comments:

  1. நல்ல விறுவிறுப்பாக செல்லும் துப்பறியும் தொடர்கதை படிக்கும் உணர்வைத் தருகிறது ரூபக், நாளுக்கு நாள் எழுத்து நல்ல மெருகேறி வருகிறது, வாழ்த்துக்கள்.. தொடர்ந்து உற்சாகமாக எழுத பாராட்டுக்கள்

    ReplyDelete
    Replies
    1. முதல் கருத்துரைக்கும் , ரசித்து பாராட்டியமைக்கும் என் நன்றி :)

      Delete
  2. சுவாரஸ்யமாக செல்கிறது... தொடர வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  3. மிக விறு விறுப்பாகச் செல்கிறது கதை

    ReplyDelete
    Replies
    1. கருத்துரைக்கு மிக்க நன்றி :)

      Delete
  4. nalla thodarchiyum kathai vadivamum koodiya paguthi..swarasyam naalukku naazh athigamaagikonde varugirathu.. padikum aarvathai thoodakkoodiya sirukathai..ipadi oru arumayaana sirikathaiyai unai elutha thoondiya anaivarukum nanri.

    ReplyDelete
    Replies
    1. மனமார்ந்து பாராட்டியமைக்கு நன்றி நண்பா.நீ தமிழில் கருத்துரையிட காத்திருக்கிறேன்.

      Delete